மும்தாஜ்!
கோடையில்
வசந்தமாய் உதித்தவளே!
இப்போது
நீ இல்லாத
வசந்தம் கூட
என் கவிதை கடலின்
கற்பனை படகிற்கு
துடுப்பாய் இருந்தவளே!
இன்;று நான்
துடுப்பிழந்த
படகாகவல்லவா
வாழ்க்கைக் கடலில்
தத்ததளித்துக் கொண்டிருக்கிறேன்!
என்
நெஞ்சத்து வயலில்
காதல் விதைகளை
விதைத்து விட்டு
அறுவடைக்குக் காத்திராமல்
கலைந்து போனாய்!
போனபின் தான்
புரிந்தது
அங்கு
முளைத்து நிற்பது
முற்களென்று!
அன்றொரு நாள்
பூவொடு
வண்டு பேசும்
பூங்கா வனத்தில்
நான்
நீயே கருவான
பாவோடு காத்திருக்க
பூவோடு பூவாக
மெல்லென
பூத்த நீ
என் காதோடு
காதல் பேசி
'காதல் சரித்திரங்கள்தான்
எனக்குப் பிடிக்கும்'
என்றாய்!
உன் பிடிப்புக்கே
இப்போதுதான்
அர்த்தம் புரிகிறது!
தோற்றுப் போன
காதல்கள் தானே
சரித்திரமாக
சிரிக்கிறது!
அதனால்தான்
அது உனக்கு
பிடிக்கும் என்றாயா?
சொல் முத்தாஜ்
சொல்!
முத்தாஜ்!
ஆக்ரா நதிக்கரை
தாஜ்மஹால் போல்
உனக்காக
என்னால்
காதல் சின்னம்
கட்ட முடியாதம்மா!
நான்
மன்னர் ஷாஜஹான் அல்ல!
இருந்தாலும்
உன் நினைவுதிரா
வசந்தத்தால்
கவிதை தாஜ்மஹால்
கட்டிக்கொண்டிருக்கிறேன்.
உன்.
கல்லறை அருகில்
கண்ணீரோடு!
கல்லறைப் பூக்களில் கூட
உன்
அழகு முகம்தான்
தெரிகிறது!
அது கூட
அழுது கொண்டுதான்
இருக்கிறது.
பனித்துளிகளை
கசிந்தபடி
மனச்சுமைகளை சுமந்த
என்
கவிதைகளைப் போல!
முத்தாஜ்!
விழித்துப்பார்!
உன்
கல்லறைக்குப் பக்கத்தில்
நான் ஒரு
கவிதை தாஜ்மஹாலை
கட்டிக்கொண்டு
இருக்கிறேன்....!
- கலாநெஞ்சன் ஷாஜஹான்
இலண்டன் தமிழ் வானொலியில் “வியாழன் கவிதை நேரம்” நிகழ்ச்சியில்
9-8-2012 அன்று ஒலிபரப்பான கலாநெஞ்சன் ஷாஜஹானின் கவிதை ( “மீண்டும் ஒரு தாஜ்மஹால்”)
கவி சொல்பவர் - ஸைபா மலீக்
No comments:
Post a Comment